பக்கங்கள்

புதன், 25 ஜூலை, 2018

திட்டமிடுதலும் நமது குழந்தைகளும்.


அன்பர்களே வணக்கம்.
       அனைவரும் நலமா.?இன்று குழந்தை வளர்ப்பு என்பது அனைவருக்கும் மிகவும் சவாலான வேலையாகவே இருக்கிறது. ஆனால் நாம் இந்த சவாலை சந்தித்துதான் ஆக வேண்டும் .நல்ல சமுதாயத்தை உருவாக்குவதற்கு பெற்றோர்கள் கடமை மிகவும் முக்கியம்.
      இன்று குழந்தைகள் விஞ்ஞான வளர்ச்சியால் மிகவும் புத்திசாலிகளாக இருக்கிறார்கள். ஆனால் இந்த புத்திசாலித்தனம் ஆக்கப்பூர்வமான விசயத்திற்கு பயன்படுத்துகிறார்களா என்பது கேள்வி குறி.
    மேலும் நாமும் உரிய பங்காற்ற தவறிவிடுகிறோம்.நாம் ஓரளவு வளர்ந்த குழந்தைகளை ஒழுங்காக திட்டமிட்டு வளர்க்க வேண்டும். ஒரு குழந்தை பள்ளிக்கு செல்ல ஆரம்பித்தவுடனேயே சில பல விசயங்களை நாம் கற்று கொடுக்க வேண்டும். அவர்களுக்கு நல்ல விசயங்களை சொல்லி வளர்க்க வேண்டும். இதை நாம் ஒழுங்காக செய்தால் தான் நாம் சமுதாயத்திற்கு ஆற்ற வேண்டிய கடமையை முடித்ததாக அர்த்தம். இல்லை எனில் துன்பப்பட போவது நமது பிள்ளைகள் தான்.
             முதலில் குழந்தைகளுக்கு திட்டமிடுதலின் அவசியத்தை சொல்லி தர வேண்டும். அவர்களை எந்தளவிற்கு அலைபேசியில் இருந்து விலக்கி வைக்க முடியுமா அந்தளவிற்கு விலக்கி வையுங்கள். நல்ல நண்பர்கள் சேர்க்கையின் அவசியத்தை சொல்லி தாருங்கள். ஒருவருக்கு நல்ல நட்பு கிடைத்து விட்டால் அதைவிட அடையத்தக்கது என்று இந்த பூமியில் ஒன்றும் இல்லை என்று புரியவையுங்கள்.நல்ல நட்பின் இலக்கணத்தை சொல்லி தாருங்கள்.
           தீயநட்பின் விளைவுகளையும் சொல்லி புரியவையுங்கள்.மேலும் பெண்குழந்தைகளை நல்ல அரவணைப்போடு வளருங்கள். அவர்கள் பாசத்திற்காக ஏங்க வைக்காதீர்கள். அவர்களுடன் நிறைய விசயங்களை மனம் திறந்து பேசுங்கள். தனிமையில் அதிக நேரம் விடாதீர்கள். பள்ளியில் இருந்து வந்ததும் அங்கே என்ன நடந்தது என்று கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். அவர்கள் மேல் அதிகமான கவனம் செலுத்துங்கள். அவர்கள் திறமையை கண்டறிந்து ஊக்கப்படுத்துங்கள்.
             பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு சரியான நேரத்தில் அனைத்தையும் முடிப்பதற்கு கற்று கொடுங்கள். முதல்நாளே மறுநாள் செய்ய வேண்டிய வேலைகளை அழகாக திட்டமிட கற்று கொடுங்கள். அதனால் உங்கள் மரியாதை சமுதாயத்தில் உயரும் என்று தெளிவுப்படுத்துங்கள்.
        பெரியவர்களிடம் மிகவும் பணிவன்புடனும் மரியாதமரியாதையுடனும் நடந்து கொள்ள கற்று கொடுங்கள். எல்லா ஜீவராசிகளுக்கும் உணவிட கற்று கொடுங்கள். மேலும் ஜுவகாருண்யத்தின் அவசியத்தை விளக்குங்கள். நம்மை போலத்தான் மற்ற ஜீவராசிகளுக்கும் இந்த பூமியில் வாழ உரிமை உண்டு என்பதை அழகாக விளக்குங்கள். இவைகளை எல்லாம் சிறுவயதில் சொல்லி கொடுத்தாலே போதும். பழக்கப்படுத்தினாலே போதும். அவர்கள் நல்ல பண்புகள் உள்ள குழந்தைகளாக வளர்த்து சமுதாயத்திற்கு ஆற்ற வேண்டிய கடமைகளை நாம் செய்துமுடித்து விட்டோம் என்று சொல்லலாம்.
         நல்ல குழந்தைகள் வளமான சமுதாயம் என்பதை நாம் அனைவரும் கொள்கையாக கொண்டால் நல்ல தலைவர்கள் நம் குழந்தைகளில் ஒருவரை உருவாக்கிய பெருமை நமக்கு சேரும். நல்ல தலைவர்களும் நல்ல மனிதர்களும் இருக்கும் சமுதாயத்தில் தீயசக்திகளுக்கு வேலை ஏது?தீவிரவாதிகளுக்கும் வேலை ஏது? .
         என்ன அன்பர்களே யோசிக்க ஆரம்பித்து விட்டீர்களா?.நல்ல குழந்தைகள் வளர்ப்பு என்பது ஒரு ஆனந்தமான விசயம் தானே?.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக