பக்கங்கள்

வியாழன், 30 ஏப்ரல், 2026

இத்தனை வன்மமும் எதற்காக??

 

 


என் மீதான 

காதல் உணர்வுகளில் 

ஒரு வித மையல் கொண்டு

என்னை நெருங்காதே...

உன் மீதான 

என் பெரும் காதலின் 

அலையில் நீ அடித்து 

சென்று நடுக் கடலில் 

தத்தளிக்கவும் கூடும்...


அந்த பரந்து விரிந்துள்ள 

பெரும் அடர்ந்த காட்டில் 

பயமின்றி ஒரு பட்டாம்பூச்சியாக 

நீ இங்கும் அங்கும் பறந்து 

செல்லும் போது கூட 

உன் இலேசான வண்ணமயமான 

சிறகை கொண்டு என்னை நீ 

தீண்டி நெருங்காதே...


அந்த சிறு தீண்டலில் கூட 

நான் பெரும் தீயாக தகித்து 

உன்னை என் காதலியின் தீயில் 

இரையாக்கி விடவும் கூடும்...

அதனால் என்னை விட்டு 

வெகுதூரம் நீ விலகியே இரு...


என் புழக்கடையில் பூத்திருக்கும் 

அந்த ரோஜா பூவை நான் 

என்னை மறந்து ரசிக்கிறேன் 

என்பதற்காக 

நீ அங்கே மலர துடிக்காதே...


நான் அந்த செடியில் உள்ள 

முள்ளாக உன் சதையை 

கிழித்து பெரிய ரணமாக 

காலம் முழுவதும் 

உன்னை வலியில் நான் 

துடிக்க விடவும் கூடும்...

அதனால் நீ அந்த மலராக 

மலர பெரிய ஆவல் கொள்ளாதே...


இத்தனை வன்மமும் எதற்காக 

என்று நீ அங்கே அழுத முகத்தோடு 

என் மீது கேள்வி கணைகளை

கேவிக் கொண்டே 

என் மீது எரிகிறாய்...


அத்தனையும் வன்மம் அல்ல 

அது நான் உன் மீது 

பெரும் பித்து பிடித்து 

ஒரு பைத்தியக்காரனாக

இங்கும் அங்கும் அலைந்து 

தொலையும் போது 


இந்த பிரபஞ்சம் முழுவதும் 

உன்னை கைநீட்டி 

குற்றம் சாட்டி 

நீ அந்த குற்ற உணர்ச்சியில் 

கரைந்து...


என் மீதான உன் பேரன்பு கொண்ட 

காதலின் சுவாசத்தை 

நிறுத்தி 

என்னை விட்டு 

வேறொரு உலகத்திற்கு 

சென்று விடக்கூடாது 

என்பதாலேயே 

எனக்கு நானே 

கொடுத்துக் கொள்ளும்/கொல்லும்

தண்டனையடி 

என் தீஞ்சுவை காதலே!!!

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:01/04/26.









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக