பக்கங்கள்

சனி, 14 செப்டம்பர், 2024

அந்த துயரத்தின் நிழலொன்றில் அடைக்கலம் தேடிய போது...


வேறு எதுவும் அடைக்கலம் 

கிடைக்கவில்லை என்று 

உறுதி செய்து சோர்ந்து அமரும் 

தருணத்தில் 

அந்த பெரும் துயரத்தின் மரத்தின் 

நிழலொன்று அடைக்கலம் 

தந்தது...

அந்த இளைப்பாறுதலில் 

என் விசும்பலின் ஒலியில் 

நுட்பத்தை மட்டும் 

என்னால்  எவ்வளவு முயன்றும் 

மறைக்க இயலவில்லை ...

அந்த விசும்பலின் வெப்பத்தில் 

எனக்கு அடைக்கலம் தந்த நிழலில் 

உதிர்ந்த இலையொன்று 

கருகிக் கொண்டு இருப்பதை

ஒரு அசாதாரண பறவை 

தனது இனிமையான கூவுதலில் 

ஸ்பரிசித்து இது நியாயமா என்று 

மெல்லிய குரலில் கேட்ட போது தான் 

புரிந்தது என் துயரம் என்னோடு 

முடிவதில்லை என்று ...

உடனே என் விசும்பலை 

நிறுத்தி விட்டு சிறிது நேரம் 

புன்னகைத்து 

அங்கே உதிர்ந்து 

கருகிக் கொண்டு இருந்த 

இலையின் கருகலை நிறுத்தி 

அதன் பசுமையை மீட்டி விட்ட 

ஆனந்தத்தில் எனக்கு 

சில நாழிகை பொழுது 

அடைக்கலம் தந்த 

அந்த மரத்தை தழுவி முத்தமிட்டு 

என் கண்களில் வழியும் கண்ணீரை 

துடைத்துக் கொண்டு 

என் முன்பு பரந்து விரிந்த சாலையில் 

தொடர்ந்து பயணிக்கிறேன்

எந்தவித துயரத்தின் சுவடும் 

எனை நெருங்கி விடாதபடி...

#துயரத்தின் நிழலொன்று 

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 15/09/24/ஞாயிற்றுக்கிழமை.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக