பக்கங்கள்

வியாழன், 24 ஆகஸ்ட், 2023

இன்றைய தலையங்கம்

 


இன்றைய தலையங்கம்:-

வணக்கம் நேயர்களே! 🙏

இன்று ஒரு திரைப்படத்தை வெளியிடுவதற்கு முன் ஒரு காட்சிப்படுத்தும் காணொளி பார்த்தேன்.... அந்த திரைப்படம் இறுகப் பற்று... அந்த சினிமாவை விளம்பரப்படுத்த உண்மையான தம்பதிகளை வைத்து சில கேள்விகள் கேட்டு நீங்கள் எவ்வளவு தூரம் உங்கள் வாழ்க்கை துணையிடம் இருந்து விலகி இருக்கிறீர்கள் என்று பாருங்கள் முடித்து இருப்பார்கள் அந்த காணொளியில்.. அந்த காணொளியை மிகவும் நிதானமாக பார்த்தேன்.. அதில் தம்பதிகளுக்கான கேள்விகள் என்று கேட்கப்பட்ட கேள்விகள் பார்த்து எனக்கு சில இடங்களில் சிரிப்பும் சில இடங்களில் எரிச்சலும் வந்தது.. அவர்கள் கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்தையும் பட்டியலிட்டு எனது நேரத்தை வீணாக்க விரும்பவில்லை... ஆனால் ஒரு சில கேள்விகள் உங்கள் முன் வைக்கிறேன்.. நீங்கள் உங்கள் வாழ்க்கை துணைக்கு ஊட்டி விட்டு இருக்கிறீர்களா என்று ஒரு கேள்வி மற்றொரு கேள்வி உங்கள் வாழ்க்கை துணை உறங்கும் போது ரசித்து இருக்கிறீர்களா என்பது...

இன்னொரு கேள்வி எந்த காரணமும் இல்லாமல் பரிசு பொருட்கள் கொடுத்து இருக்கிறீர்களா என்பது சில... இன்னும் நிறைய கேள்விகள் அதில் கேட்கப்பட்டு உள்ளது..அதை எல்லாம் நீங்களே சென்று அந்த காணொளியை பார்த்து முடிவு செய்துக் கொள்ளுங்கள்.. நான் அந்த காணொளியை பார்த்து அந்த காணொளியை தயாரித்தவர்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன்.. நீங்கள் கேட்ட அந்த கேள்விகள் அனைத்திற்கும் பூஜ்யம் என்றால் அவர்கள் நல்ல அந்நியோன்ய தம்பதிகள் இல்லையா என்று கேட்கிறேன்... அவர்கள் கேட்ட எந்த கேள்விக்குள்ளும் அடங்காமல் மிகவும் ஆத்மார்த்தமான நிம்மதியான அந்நியோன்யமான இல்லறம் நடத்தி வருபவர்கள் இங்கே மிகவும் அதிகம்.. புரிதல் ஒன்று மட்டும் தான் ஆத்மார்த்தமான தம்பதிகளுக்கு அந்நியோன்யமான தம்பதிகளுக்கு வேண்டுமே தவிர சில பல கேள்விகளால் அந்த திருமண உறவை நிச்சயமாக அடக்க முடியாது..நீ இதை எல்லாம் செய்யவில்லை அதனால் உன்னோடு வாழ இயலாது என்று அந்த காணொளியை பார்த்து கிறுக்குத்தனமாக விலகும் இணைகளும் இங்கே இருக்கிறார்கள் என்று யோசித்து அந்த காணொளியை வெளியிட்டு இருக்கலாம்..

ஏதோவொரு பிணைப்பு காதல் இணையின் குணத்தை புரிந்துக் கொள்ளுதல் இதில் தான் நல்ல தம்பதிகள் அடங்குவார்கள்..அதை விடுத்து ஒரு சில கேள்விகள் கேட்டு விட்டு நீங்கள் பாருங்கள் உங்கள் இணையிடம் இருந்து இவ்வளவு தூரம் விலகி இருக்கிறீர்கள் என்று சொல்வது எல்லாம் மிகவும் அபத்தமான செயல்..

இங்கே தம்பதிகள் என்ற சொல் அதீதமான ஒரு நெருக்கத்தை இருவருக்கும் உணர்த்தும்.. அதை எவருக்கும் வார்த்தைகளால் புரிய வைக்க இயலாது என்பதே உண்மை..

வித்தியாசமான ப்ரமோ வெளியிட்டு இருக்கிறார்கள் உண்மை தம்பதிகளை வைத்து.. ஆனால் அதில் உள்ள கேள்விகளுக்கும் அப்பாற்பட்டது வாழ்க்கை.. இங்கே அதனால் தான் உயிரோட்டமான நெருக்கம் நிறைந்த தம்பதிகள் வெளி உலகிற்கு தன்னை அறிவிக்காமல் அதீத காதலோடு பயணித்து மௌனமாக விடை பெறுகிறார்கள்..

#இறுகப்பற்றுதிரைப்படப்ரமோ.

#இளையவேணிகிருஷ்ணா.

#இன்றையதலையங்கம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக